கேரள மாநிலம் கொல்லம் (Kollam) நகரில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கருகில், ஒரு மர்ம சூட்கேஸ் கிடப்பதை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள கல்லறை தோட்டத்தில் (cemetery) குழாய் பழுதுபார்க்க சென்ற தொழிலாளர்கள், அதனை காணும் போது சந்தேகத்துடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கொல்லம் கிழக்கு (Kollam East) போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, அதில் பிளாஸ்டிக் போர்வையால் மூடப்பட்ட மனித எலும்புக்கூடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எலும்புக்கூடு யாருடையது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை, ஆனால் அது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவியல் மற்றும் தடயவியல் ஆய்வுக்காக எலும்புக்கூடு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, மேலும் தகவல் பெற முயற்சி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த பகுதியில் மாயமானவர்களின் புகார்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூட்கேஸ் எவ்வாறு தேவாலயத்தருகில் வந்தது, யாரால் இங்கு வைக்கப்பட்டது என்பதற்கான மர்மம் தற்போது போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த எலும்புக்கூடு தொடர்பாக எந்தவொரு புகாரும் வருமா என்பதற்காக, அந்த பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.