தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தில், மகளின் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறால், ஒரு 39 வயது தாயை அவரது சொந்த மகள் சதி செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஜீடிமெட்லா காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் அஞ்சலி (39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை அவரது 16 வயது மகள், காதலன் பகீலா சிவா (19) மற்றும் காதலனின் சகோதரர் யஷ்வந்த் (18) ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில், 10ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, இன்ஸ்டாகிராமில் சிவா என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இவர்கள் காதலித்து வந்த நிலையில் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி விட்டனர்.‌இதனால் சிறுமியின் தாயார் தன் மகளை கண்டுபிடித்து கடுமையாக திட்டி உள்ளார். இதன் காரணமாக அந்த மாணவி, தனது காதலன் மற்றும் அவரின் சகோதரன் ஆகியோர் சேர்ந்து தாயை கழுத்தை நெரித்து கொன்று, பின்னர் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர். இதிலிருந்து சம்பவம் இடத்திலேயே அஞ்சலி உயிரிழந்தார். விசாரணையில், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் மூவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோன்று கடந்த மாதம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த அதே மாதிரியான சம்பவம், சமூகத்தில் இளம் தலைமுறையின் மனநிலை மற்றும் பெற்றோருடனான உறவு குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. சம்பவம் குறித்து ஏ.சி.பி. பாலநகர், “அந்த மாணவியின் அம்மா கொலை செய்யப்பட்டுள்ள விஷயத்தில் உறுதியான ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்துள்ளோம். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தாயை கொன்ற மகளின் செயலால் அப்பகுதி முழுவதும் சோகமும் அதிர்ச்சியும் நிலவுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.