பாகிஸ்தானில் கழுதை விலைகள்  உயர்ந்துவருவது, அந்நாட்டின் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இதற்கு சீனாவில் தயாரிக்கப்படும் எஜியாவோ (Ejiao) என்ற பாரம்பரிய மருந்துக்கான தேவைவே இந்த விலை உயர்வுக்கு காரணமாக மாறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பலர், குறிப்பாக வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், குறைந்த வருமானத்துடன் கழுதை வண்டியை தங்கள் வாழ்க்கையின் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர்.

ஹபூரில் வசிக்கும் அப்துல் ரஷீத் என்பவர், கடந்த வாரம் தனது கழுதையை விபத்தில் இழந்துவிட்டதால் தற்போது வேலை இல்லாமல் தவிக்கிறார். ஏற்கனவே 30 ஆயிர ரூபாய்க்கு வாங்கியிருந்த கழுதையின் விலை இப்போது ரூ.2 லட்சமாக உயர்ந்துள்ளது. இதை மீண்டும் வாங்க முடியாத நிலையில், ரஷீத் மாதிரியான ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த விலை உயர்வுக்கு காரணம், சீனாவில் ஏற்றுமதி செய்யப்படும் கழுதைத் தோலை கொண்டு தயாரிக்கப்படும் எஜியாவோ மருந்து. இது, உடலுறுதி, நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த சோகை மற்றும் எலும்பு பலத்தை அதிகரிக்க பயன்படுகிறது. கடந்த ஆண்டுகள் வரை ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து இதற்காக தோல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், 55 நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்க ஒன்றியம் கடந்த ஆண்டு இதற்கு தடையிட்ட பிறகு, சீனா தற்போது பாகிஸ்தானை நம்பி இருக்கிறது.

இதையடுத்து, சீன அரசு பாகிஸ்தானில் கழுதைப் பண்ணைகளை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ராணா தன்வீர் உசேனை சந்தித்த சீன அதிகாரிகள், பாகிஸ்தானில் கழுதைப் பண்ணைகள் கட்டுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். சட்ட அனுமதிகள் கிடைத்த பிறகு, சீன நிறுவன்கள் பாகிஸ்தானில் தொழில்முறை கழுதைப் பண்ணைகளைத் தொடங்க வாய்ப்புள்ளது. இது, ஒருபுறம் சீனாவுக்கு நன்மையளித்தாலும், பாகிஸ்தானின் ஏழை மக்களுக்கு வாழ்க்கைப் போராட்டத்தை கடுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.