பேருந்துகளில் பயணிக்கும்போது திருடர்களால் பயணிகள் மட்டுமின்றி, இப்போது நடத்துனர்களும் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு சிசிடிவி காணொளி இதற்கான எடுத்துக்காட்டு. அந்தக் காணொளியில், ஒரு திருடன், நடத்துனரின் அருகில் இருந்த மொபைலை வேகமாக  திருடிவிட்டு ஓடுகிறான். இந்த சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த காட்சிகளில், நடத்துனர் பின்புறத்தில் அமர்ந்திருந்த நிலையில், தனது மொபைலை பக்கத்து இருக்கையில் வைத்திருந்தார். திருடன், சாதாரண பயணி போல இருந்து, நேரத்தைக் கணித்து, பேருந்து நிற்கும் போது கதவு திறந்தவுடன் மொபைலை எடுத்துவிட்டு தப்பிச் செல்கிறான். வியப்பான விஷயம் என்னவென்றால், நடத்துனருக்கே தனது மொபைல் திருடப்பட்டது தெரியவில்லை.

 

இந்த வீடியோ “@gharkekalesh” என்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவாகி, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது. பொதுமக்கள் இந்த காணொளியைப் பார்த்து, “என்ன ஒரு சுத்தமான கை!”, “இந்த வேலைக்கு விருதே தரலாம்!” என வேடிக்கையாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம், பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் அனைவரும் தங்கள் சொத்துக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.