பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் மஹுவாவில் உள்ள ஹர்பூர் மிர்சாநகர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமந்த் குமார் மீது குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், மாவட்ட கல்வி அதிகாரியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியருடன் தகாத உறவில் இருந்ததால் சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில், இவர்மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பேரில் மாவட்ட திட்ட அலுவலர் சஷி ரஞ்சன் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மஹுவா தொகுதி கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரிக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

விசாரணைக்காக பள்ளிக்கு சென்ற அதிகாரிக்கு, அந்தப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எந்த விளக்கமும் வழங்க மறுத்தனர். இது சந்தேகங்களை ஏற்படுத்தியது.

பின்னர், ஆய்வகத்தில் சாவி இல்லையென பொய்யான தகவல் கூறப்பட்டதையடுத்து, விசாரணை குழு நேரில் சென்று சாவியை பெற்றுக்கொண்டு ஆய்வகத்தை திறந்து பார்த்தபோது அதில் ஒரு படுக்கை இருந்தது தெரியவந்தது. பள்ளிக்குள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக படுக்கையறை அமைக்கப்பட்டிருந்தது உறுதி ஆனது.

இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியரின் செயல் பள்ளியின் மதிப்பையும் கட்டுப்பாடுகளையும் பாதிப்பதாக கருதி, அவரை பதவியில் இருந்து இடைநீக்கி, 45 நாட்களில் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, தொடர்புடைய ஆசிரியர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் பள்ளிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.