
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணமாக வந்த கேரளா இளைஞர்கள் மீது தேனீக்கள் கொட்டிய சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடலூர் அருகே உள்ள ஊசி மலைக்குப் போன ஜாகீர் (26) மற்றும் ஆசிப் (26) ஆகியோர், காட்சி முனைப் பகுதியில் இருந்து பள்ளத்தில் உள்ள பாறை பகுதிக்குள் இறங்கி சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் ஒரு தேனீ கூட்டின் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. இதனால் தேனீக்கள் கொட்டியதில், ஜாகீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும், போலீசாரும், வனத்துறையினரும் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஜாகீரின் உடலை மீட்டனர். உடன் இருந்த ஆசிப் ஆபத்தான நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மலைய பகுதியில் உள்ள தேனீக்கள் கொட்டியதால் விஷம் அதிகமாக பரவியிருக்கலாம் என அங்குள்ள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இயற்கை சூழலில் சீண்டல் ஏற்படுத்தும் செயற்பாடுகள், எதிர்பாராத உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதற்கான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது. நடுவட்டம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.