
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(47). இவர் அரசு பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். மணிகண்டன் அணைக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது மணிகண்டன் அந்த பெண்ணின் மீது மோதினார். இதனால் அந்த பெண் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை எடுத்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை அப்பகுதி ம்க்கள் சரமாரியாக தாக்கியதால் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த போது உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். மணிகண்டனை தாக்கியவர்களை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு போடுமாறு மணிகண்டன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.