
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் சின்னப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பாலமுருகன், பானுப்ரியா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பானுபிரியா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பானுப்பிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதுபோதையில் சின்னப்பா தனது மனைவி மற்றும் மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அதிகாலை சின்னப்பா ரத்த வெள்ளத்தில் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார். அப்போது மது போதையில் சின்ன அப்பா கை கால்கள் மற்றும் மர்ம உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக பச்சையம்மாள் உறவினர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னப்பாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போது பச்சையம்மாள் கூறியதாவது, எனது கணவர் போதையில் என்னை அடிக்கடி தொந்தரவு செய்வார்.
எனது மகள் வீட்டிற்கு வந்த போதும் அவர் தகாத வார்த்தைகளால் பேசி என்னை கொடுமைப்படுத்தினார். இதனால் இரண்டு பேருமே பக்கத்து வீடுகளில் தஞ்சம் அடைந்தோம். அதிகாலை 3 மணிக்கு எனது வீட்டிற்கு சென்று கணவரின் தலையில் இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கினேன். அவர் மயங்கி விழுந்துவிட்டார். அவர் உயிர் பிழைத்தால் என்னை கொன்று விடுவார் என பயந்தேன். உடனே கறி வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியால் அவரது கை, கால்களை அறுத்தேன். பின்னர் அவரது பிறப்புறுப்பையும் கோபத்தில் அறுத்து வீசி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.