தமிழ் சினிமாவில் கே. பாலச்சந்தர் படத்தின் மூலமாக அறிமுகமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் ஒரு பிரபலம் தான் புன்னகை மன்னன் படத்தில் ஒரு சிறப்பான ரோலில் நடித்து அசத்தியிருந்த  ஷிஹான் ஹுசைன். இந்த படத்தை தொடர்ந்து வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டவருக்கும் இவர் கராத்தே பயிற்சி அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், “தனக்கு ரத்த புற்று நோய் வந்திருப்பதாக கூறினார். நான் ஒரு நாள் வாழ்வதற்கு இரண்டு யூனிட் ரத்தம் மற்றும்  பிளேட்லெட்டுகள் வேண்டும். இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம். நான் கராத்தே சொல்லிக் கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். பவன் கல்யாண் இங்கு வந்து தான் கராத்தே கற்றுக் கொண்டார். எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல விஜய்க்கும் ஒரு கோரிக்கை அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு வீடு ஓர் வில்வித்தை வீரர், வீராங்கனை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.