ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர், தனது தவறான ஷாட்டால் பஞ்சாப் பணியை வெற்றி பெற முடியாமல் செய்துவிட்டார் என முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொண்ட பஞ்சாப், 191 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி எதிர்கொண்ட போது, ஷ்ரேயஸ் வெறும் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

மும்பை இந்தியன்ஸை எதிர்த்து நடந்த குவாலிஃயர் 2 ஆட்டத்தில் 87 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்று வந்த ஷ்ரேயஸ் ஐயரிடம் இறுதிப்போட்டியில் ரசிகர்கள் மற்றும் அணியின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், அவர் ரோமாரியோ ஷெப்பர்டின் பந்தில் தவறான ஷாட் விளையாடி விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவிடம் கேட்சாக வெளியேறியதன் விளைவாக, பஞ்சாப் அணி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில், முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங், “ஐயர் விளையாடிய அந்த ஷாட் என்பது குற்றமான செயல். இந்த மாதிரியான தவறான ஷாட்கள் கிரிக்கெட்டில் செக்ஷன் 302 – கொலைக் குற்றம் என்று கருதப்படலாம்,” என்று தனது வீடியோ பேட்டியில் கடுமையாக தாக்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு ஷ்ரேயஸ் செய்தது கிரிமினல் குற்றம் என அவர் காட்டமாக விமர்சனம் செய்ததோடு இதற்காக அவரை 2 போட்டிகளில் தடை கூட செய்யலாம் எனக் கூறியுள்ளார். அதோடு அவர் செய்த குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது என்றும் கூறியுள்ளார்.

இந்த விமர்சனம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்திற்குரியதாகி உள்ளது. கடந்த 2008 முதல் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டத்தை பெற முடியாமல் தவித்து வந்த RCB அணிக்கு இது முதல் ஐபிஎல் கோப்பையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. மேலும் பஞ்சாப் அணியை கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பிறகு இறுதி சுற்றுக்கு அழைத்து சென்ற கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை கிரிமினல் என யோக்ராஜ் சிங் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏஏற்படுத்தியுள்ளது.