மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை அருகே 1 வயது குழந்தையை தரையில் இடித்துத் தாக்கி கொன்ற தந்தை ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதாகியவர், ராய்கட் மாவட்டம் பென் தாலுக்கா, தேவ்மால் தாக்குர்வாடி கிராமத்தை சேர்ந்த 40 வயது நபர் என தகவல் வெளியாகியுள்ளது.

போலீசாரின் கூற்றுப்படி, நேற்று மதியம் 5 மணியளவில், குழந்தை உடல்நலக்குறைவால் தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அழுதபடியே இருந்ததால் கடும் கோபம் கொண்ட தந்தை, தன் 1 வயது மகளின் தலையை தரையில் உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரத்தம் சொட்ட அந்தக் குழந்தை உடனடியாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வை பார்த்த அவரது மற்ற மூன்று குழந்தைகள் அலறிக்கொண்டு அருகிலுள்ள வீட்டிற்கு ஓடி சென்று உதவி கேட்டுள்ளனர். அதன்பின், அக்கம்பக்கத்தினர் அந்தக் கொடூரத் தந்தையை  பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக போலீசார் இந்திய புதிய குற்றச் சட்டத்தின் பிரிவு 103(1) மற்றும் சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டம், 2000-ன் பிரிவு 75ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது