தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த மாதையன் (61), விவசாயி. அவருக்கு குப்பாயி என்ற மனைவியும், 31 வயதான சாந்தகுமார் என்ற மகனும் உள்ளனர். திருமணமாகாத சாந்தகுமார், கடந்த சில ஆண்டுகளாக மதுவுக்கு கடுமையாக அடிமையாகிவிட்டார். அவர், தினமும் குடித்துவிட்டு தந்தை மற்றும் தாயுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சண்டைகள் காரணமாக, மன உளைச்சலுடன் இருந்த மாதையன், நேற்று முன்தினமும் மகன் சாந்தகுமாரின் நடவடிக்கையால் கடும் கோபமடைந்துள்ளார். இரவு தனது மனைவி தூங்கிய பின், வீட்டின் வெளியே இருந்த பெரிய கல்லை எடுத்துக்கொண்டு, மகனின் அறைக்குள் சென்று, அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். பின்னர் அதே கல்லை மீண்டும் பழைய இடத்தில் வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் தூங்கச் சென்றுள்ளார்.

மறுநாள் காலை, சாந்தகுமாரை அவரது தாய் குப்பாயி எழுப்பச் சென்ற போது, ரத்த வெள்ளத்தில் அவர் கிடந்ததை கண்டு, அவர் கீழே விழுந்து காயம் அடைந்திருப்பார் என கருதி, கணவர் உதவியுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்றபோது மருத்துவர்கள் சாந்தகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கொலை செய்தது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, குப்பாயி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அம்மாபேட்டை போலீசார், தந்தை மாதையனே மகனை கொலை செய்ததை கண்டறிந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையே மகனை கல்லால் அடித்து கொன்றது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.