
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சோமனூரைச் சேர்ந்த வருண்காந்த் (22) கடந்த மே 12-ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டு, காப்பக வளாகத்தில் தோண்டப்பட்ட குழியில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், காப்பக நிர்வாகிகள் உள்பட 11 பேரை ஏஎஸ்பி கிருஷ்டி சிங் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.
இந்த விசாரணைக்குழுவில் இருந்த மகாலிங்கபுரம் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளராக இருந்த நவநீதகிருஷ்ணன் (32), குற்றவாளிகளை கைது செய்தபோது அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 18 பவுன் நகை மற்றும் ரூ.1.52 லட்சம் பணத்தை காவல்துறை கணக்கில் கொண்டு வராமல் தன்வசமாக வைத்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, முதலில் ஏதும் தெரியாதது போல நடந்துகொண்ட அவர், தொடர்ந்து விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மகாலிங்கபுரம் போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 18 பவுன் நகை மற்றும் ரூ.1.52 லட்சம் பணமும் மீட்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் இந்த தகவல் வெளியாகியதும், போலீசாரின் செயல்பாடு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.