உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டம், டகோர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமதுபாத் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஸ்ரீகுமார் என்பவர்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பாக அவரது சகோதரர் முகேஷ், ஸ்ரீகுமாரின் மனைவி மது மற்றும் அவரது தாய் குடும்பத்தினர் இணைந்து, தேநீரில் விஷம் கலந்து கொன்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, மதுவுக்கு வேறு ஒரு ஆணுடன் காதல் தொடர்பு இருந்ததாகவும், அதை ஸ்ரீகுமார்  தட்டி கேட்டதால் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, ஏப்ரல் 18, 2024 அன்று மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த மதுவை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீகுமார், தனது மனைவியுடன் அகமதாபாத் சென்று வேலை பார்த்து வந்தார். பின்னர் அவரது மனைவி தாய்வீட்டுக்கு சென்று விட்டதாகவும், சில காலத்திற்குப் பிறகு ராஜஸ்தானில் வேலைக்குச் சென்று அவர், மஹோபா மாவட்டத்தில் மாமியார் வீட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவருக்கு தேநீரில் விஷம் கொடுக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கே அவரை விட்டுவிட்டு மாமியாரும் தலைமறைவானதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக இது தற்கொலை என கருதப்பட்டாலும், தற்போது இது திட்டமிட்ட கொலை என மாற்றியமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தடயவியல் அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அறிக்கை வந்தபின், இது தற்கொலையா அல்லது கொலையா என்பதைத் தீர்மானிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குடும்பத்தினர் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது ஜலானிலும் மஹோபா மாவட்டத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் தந்தை ஹரிகிருஷ்ணா ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பதும், மகனின் மரணத்தால் பெரும் மனவேதனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்து, விசாரணையை முழுமையாக நடத்துவதாக உறுதியளித்துள்ளனர்.