
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் நடந்த ஒரு கொடூரமான குடும்ப கொலை வழக்கில், விரைவு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. சிவில் இன்ஜினியராக பணியாற்றிய சந்தன் ராய் சவுத்ரி என்பவர் தனது மனைவி போராவி கங்குலி மற்றும் ஒரு வயது மகளான ஷாலினியை ரயிலில் தள்ளி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், சந்தன் ராய் தனது குடும்பத்துடன் மகத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது, பாஃபண்ட் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலிலிருந்தே மனைவியையும், தனது மகளையும் தள்ளிவிட்டார். இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரம்பத்தில் இது விபத்தாகவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தீவிர விசாரணையின் பின்னர் இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.
போலீசாரது விசாரணையில் சந்தன் ராய்க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதனால்தான் தனது மனைவியைத் கொல்ல நினைத்தார். கொலைக்குப் பிறகு மனைவியின் மொபைலை எடுத்து சாட்சியங்களை அழிக்க முயன்றார். ஆனால் அதே சிம் கார்டை தன் மொபைலில் பயன்படுத்தியதால் அவரது செயல்கள் பதிவாகி, காவல்துறையால் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் உண்மை வெளிவந்தது. அரசு தரப்பில் 12 வலுவான சாட்சிகள் மற்றும் அறிவியல் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த கூடுதல் மாவட்ட நீதிபதி சுனிதா சர்மா, “இது வெறும் ஒரு கொலை அல்ல; இது மனித நேயத்தின் மீது விழுந்த ஒரு கறை,” எனக் கடுமையாக கருத்து தெரிவித்தார். மேலும் சந்தன் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கின் தீர்ப்பு, எந்தவொரு திட்டமிட்ட குற்றமும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.