
மலேசியாவின் கோலாலம்பூர் பேராக் மாகாணத்தில் சுல்தான் இட்ரிஸ் என்ற தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு சொந்தமான மற்றொரு வளாகம் ஜெர்டேவில் என்ற பகுதியிலும் செயல்பட்டு வந்தது. அங்கு பயிலும் மாணவர்கள் பேராக்கில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சிக்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தாய்லாந்தில் எல்லையிலுள்ள கெரிக் நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது முன்பு சென்று கொண்டிருந்த காரின் மீது பேருந்து மோதியது.
இதனால் பேருந்தும், காரும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து காரில் பயணம் செய்தவர்கள், மாணவர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த நாட்டின் பிரதமர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.