
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, “கன்னடம் என்பது தமிழில் இருந்து தோன்றியது” என நடிகர் கமல்ஹாசன் கூறியதிலிருந்து சர்ச்சை வெடித்துள்ளது.
கடந்த மே 24ஆம் தேதி சென்னை நிகழ்ச்சியில் கமல் பேசிய பேச்சு, கர்நாடகத்தில் பலரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “அவரது மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது” எனக் கூறிய கமல்ஹாசனின் கூற்று, கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கருதி, பல கன்னட அமைப்புகள் ‘தக் லைஃப்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, கர்நாடக பிலிம் சேம்பர், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத வரை திரைப்படம் திரையிடப்படாது என அறிவித்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு பெருமைமிக்க வரலாறு உண்டு. கமல்ஹாசனுக்கு அது தெரியாது” எனக் கடும் விமர்சனம் செய்தார். பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா, “நாகரிகமற்ற பேச்சுக்காக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறினார். ஆனால் கமல்ஹாசன் தான் பேசியதில் தவறு கிடையாது எனக்கூறி மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதோடு கர்நாடகாவில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சனையாக மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவர் கூறியதாவது:
“நாம் அண்டை மாநில மக்கள். ஒன்றாக வேலை செய்கிறோம். நம் தண்ணீர் தமிழகத்துக்கு செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வசிக்கிறார்கள். நாம் எதிரிகள் அல்ல; நண்பர்கள்தான். இந்த பிரச்சனையின் பின்னணி எனக்குத் தெரியாது, அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.”
முக்கியமாக, கமல்ஹாசன் தொடர்ந்து “நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், தவறு செய்யவில்லை எனில் மன்னிப்பு கேட்க மாட்டேன்” எனத் திட்டவட்டமாக கூறி வருகின்றார்.
இந்நிலையில், ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியானாலும், கர்நாடகாவில் அந்த படம் திரையரங்குகளில் வெளியாவது சந்தேகமாக இருக்கிறது. மேலும் தற்போது வரை முன்பதிவு தொடங்கப்படாத நிலையில், படத்தின் வசூலிலும் இதனால் பாதிப்பு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது.