திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கையில் உள்ள ஒரு பையில் 33 ‌ லட்ச ரூபாயை வைத்திருந்தனர். இவர்களை 8 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்தனர். அதன்பிறகு கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி  தேடினர்.

அந்த விசாரணையின் போது செல்வகுமார் உட்பட 3 பேரை நேற்று  காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் ரூ. 27 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் தேர்தல் சமயத்தில் மோட்டார் சைக்கிளில் பெரும் தொகையை எடுத்துச் சென்றது எதற்காக என்பது குறித்தும் முருகன் மற்றும் வானமாமலை ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.