கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரான பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜகவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் பேசியதாவது, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். ராணுவத்தில் பணிபுரிந்த தங்களை போன்றவர்களுக்கு வெடி குண்டு வைக்க தெரியும். மேலும் துப்பாக்கி சுடுவதிலும், சண்டைபோடுவதிலும் நாங்கள் கெட்டிக்காரர்கள். இதையெல்லாம் செய்ய வைத்து விடாதீர்கள் என அவர் மிரட்டல் விடுத்து பேசினார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக இதுபோன்று மிரட்டல் விடுக்கும் வகையில் இனி பேசமாட்டேன் என மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, இனி இது போன்று பேச மாட்டீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாண்டியன் இனிமேல் இதுபோன்று பேச மாட்டேன் என நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். அதனை தொடர்ந்து ஒரு வாரம் சென்னையில் தங்கி இருந்து திருவல்லிகேணி போலீசில் கையெழுத்து போடவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.