மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 3 இளம் பெண்கள் ஒரே ஸ்கூட்டியில் பயணம் செய்துள்ளனர். இவர்களை ஒரு டிராபிக் பெண் போலீஸ் மறித்துள்ளார். பின்னர் மூன்று பேர் ஒரே ஸ்கூட்டியில் பயணம் செய்ததற்காக அந்த பெண் போலீஸ் இளம்பெண்களை நடு ரோட்டில் மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு திடீரென ஒரு இளம் பெண்ணை கன்னத்தில் அறைந்து விட்டார்.

அந்த வீடியோவில் இருந்த பெண் போலீஸ் பிரணிதா முஸ்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் அந்தப் பெண் போலீஸ் இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தபோது அந்த மூன்று பெண்களும் ஆபத்தான முறையில் ஒரே ஸ்கூட்டியில் பயணம் செய்வதை பார்த்தேன். நான் மூன்று ஆண்டுகளாக டிராபிக் போலீஸ் ஆக பணிபுரியும் நிலையில் அவர்களை மறித்து இதுபோன்ற ஆபத்தான முறையில் பயணம் செய்யக்கூடாது என கூறினேன்.

 

ஆனால் அவர்கள் என்னுடைய வேலையை மட்டும் பார்க்குமாறு கூறிவிட்டு தொடர்ந்து ஆபத்தான முறையில் சென்றதோடு பின்னால் அமர்ந்திருந்த பெண் சரியான முறையில் அமரவில்லை. நான் அவர்களை பின்தொடர்ந்து சென்ற நிலையில் அந்த நேரத்தில் ஒரு அரசு பேருந்து எதிரே வந்ததால் அவர்களை மறித்தேன்.

அதன்பிறகு அவர்களை நான் திட்டியதோடு பின்னர் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தேன். இதனை நான் ஒரு போலீசாக செய்யவில்லை அவர்களின் தாயாகத்தான் செய்தேன். நான் அவர்களிடம் பேசிய வார்த்தைகள் தவறுதான். அதற்காக அந்த பெண்களிடமும் பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். மேலும் அதே நேரத்தில் என்னுடைய நோக்கம் தவறு கிடையாது என்று கூறினார்.