தென் கொரியாவில் மனைவியுடன் நடந்த விவாகரத்து சண்டை காரணமாக, ஒரு 67 வயதான முதியவர் மெட்ரோ ரயிலில் தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 31ஆம் தேதி நடந்துள்ளது. “வோன்” என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த நபர், மெட்ரோவின் பெட்டிக்குள் பெட்ரோலை ஊற்றி, பின்னர் தனது உடலுக்கும் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தினால் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்றன. இதில் 22 பயணிகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் 129 பயணிகளுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்து காரணமாக சுரங்கப்பாதையும், ரயிலின் உள்ளமைப்பும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மொத்த சேதம் 330 மில்லியன் வோன் (தென் கொரிய மதிப்பு) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

இந்தச் சம்பவம் குறித்து யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது, வோன் மீது “கொலை முயற்சி”, “ஓடும் ரயிலில் தீ வைப்பு”, மற்றும் “ரயில்வே பாதுகாப்பு சட்ட மீறல்” என மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வீடியோவில் அவரது தீவிரமான செயல் தெளிவாக காணப்பட்டதால், இது சட்டரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை @XXV_mon என்ற பயனர் வெளியிட்டதிலிருந்து 69 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “சண்டைகள் சகஜம், ஆனால் இதுபோன்ற செயல் எப்படி நியாயமானது?” என ஒருவர், “இப்படி ஒரு பைத்தியக்காரனுடன் யார் வாழ முடியும்?” என மற்றொருவர் பதிவிட்ட கருத்துகள் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளன. மேலும் இந்த சம்பவம் ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.