
உத்திரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் 32 வயதான சங்கீதா என்ற பெண், தனது கணவர் பண்டி மற்றும் அவரின் குடும்பத்தினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தார்.கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பண்டி மற்றும் சங்கீதாவுக்கு இடையே திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் சங்கீதாவிடம் அவரது கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக தற்போது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரில், புல்லட் பைக் மற்றும் ஒரு எருமையை வரதட்சணையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, சங்கீதா மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, சூடான இரும்பால் உடல் மற்றும் தனிப்பட்ட உறுப்புகளில் சுட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, பண்டி, அவரது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகள் இணைந்து சங்கீதாவை தாக்கினர். தாக்குதலின் போது அவர் அதே இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்துக்குப் பிறகு, வீடியோவில் அவரது உடலின் பல பகுதிகளில் எரிப்பு காயங்கள் காணப்பட்டன. இதன் அடிப்படையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். முதற்கட்ட அறிக்கையில் மரண காரணம் உறுதி செய்ய முடியாத நிலையில், உடல் உறுப்புகள் பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளதாக வட்டார காவல் அலுவலர் தனஞ்சய் சிங் தெரிவித்தார்.
இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசார் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட பண்டியின் குடும்பத்தினரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கீதாவின் குடும்பம், இது ஒரு திட்டமிட்ட வரதட்சணை கொலை எனக் கூறி, நீதிக்காக குரல் எழுப்பியுள்ளது. குற்றவாளிகள் வீடு பூட்டிய நிலையில் தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.