சர்வதேச அரசியல் களத்தில் எப்போதுமே பரபரப்பாகப் பேசப்படும் உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி, தற்போது ஒரு பொதுக் கூட்டத்தில் தண்ணீர் குடித்த விவகாரத்திற்காக உலக அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) மாநாடு ஒன்றில் அவர் பங்கேற்றபோது, அங்கிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலின் மூடியை (Cap) அவர் கையாண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து அவர் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தாகத்திற்காக அவர் செய்த அந்த ஒரு சிறிய செயல், ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைக்கு எதிரானது என்று இணையவாசிகள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

​விவரங்கள் படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அண்மையில் புதிய கடுமையான சட்டம் ஒன்று அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகள் தனியாகக் கழன்று கடலில் கலப்பதையோ அல்லது நிலத்தில் வீசப்பட்டு இயற்கை மாசுபடுவதையோ தடுக்க, பாட்டிலோடு எப்போதும் இணைந்தே இருக்கும் ‘டைடு கேப்’ (Tethered Caps) தொழில்நுட்பத்தை உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜெலென்ஸ்கி, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை உறைந்துபோய் திறக்க முயன்றபோது, அந்த மூடியை பாட்டிலோடு இணைத்து வைக்காமல், அதீத பலத்தைப் பயன்படுத்தித் தனியாகப் பிடுங்கி எடுத்து மேஜை மீது வைத்துள்ளார். ​இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், “ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை ஜெலென்ஸ்கி மீறிவிட்டார்” என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், மற்றொரு தரப்போ உக்ரைன் இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக இணையாததால், அந்த நாட்டு மக்களுக்கு இத்தகைய பிளாஸ்டிக் விதிகள் இன்னும் பழக்கப்படவில்லை என்றும், ஜெலென்ஸ்கி செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். உக்ரைன் மக்கள் பலரும் “எங்கள் அதிபர் எங்களுக்காக இதைச் செய்து காட்டியுள்ளார்” என்று ஜாலியாக மீம்ஸ்களைப் போட்டு இந்த விவகாரத்தைச் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.