ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அக்ராவைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரின் வயிற்றிலிருந்து,  210 செ.மீ. நீளமுள்ள முடி குழாய் (trichobezoar) அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி, கடந்த ஒரு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர் வாந்தி, உணவுக் குழப்பம் ஆகியவற்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீது சிடி ஸ்கேன் (CECT) பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், வயிற்றிலிருந்து சிறுகுடல் வரை பரவியிருந்த, மிகவும் கடினமான ஒரு நீளமான பொருள் கண்டறியப்பட்டது. உடனடியாக அவசர அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த  அறுவை சிகிச்சையை, மருத்துவர் ஜீவன் கங்காரியா தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர். அவருடன் மருத்தவர்கள் ராஜேந்திர புஙாலியா, தேவேந்திர சைனி, அமித், சுனில் சவுகான் மற்றும் அனஸ்தீஷியா நிபுணர்கள் இணைந்திருந்தனர்.

சிகிச்சையின் போது, சிறுமியின் வயிற்றிலிருந்து 210 செ.மீ. நீளமுள்ள முடிகள் அடர்ந்து சேர்ந்த குழாய் ஒன்று அகற்றப்பட்டது. இது, உலகில் இதுவரை அகற்றப்பட்ட மிக நீளமான trichobezoar என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முந்தைய சாதனை 180 செ.மீ. ஆகும்.

இந்த சிறுமி, 6-ம் வகுப்பு படிக்கும்போது சக மாணவர்களைப் பார்த்து, மண், மரத்துண்டு, நூல், சாக் போன்ற உணவல்லாத பொருட்களை உண்ணும் பழக்கத்தில் ஈடுபட்டுள்ளார். இது ‘பிகா’ (Pica) எனப்படும் ஒரு மனநலக் கோளாறு.

இது உணவல்லாத பொருட்களை அடிக்கடி சாப்பிட தூண்டும் நிலையாகும். அவ்வாறு உண்டுவரும் முடிகள், வயிற்றில் அடர்ந்து சேர்ந்து, வயிற்று செயல்பாட்டையே பாதிப்பதுடன், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் செல்லும்.