கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம்-பேரூர் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே மல்லிகா (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் ஓட்டு கேட்பது போல் கையில் துண்டு பிரசுரங்களுடன் ஒருவர் வந்துள்ளார். அந்த நபருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் ஓட்டு கேட்க வந்திருப்பதாகவும் தனக்கு தாகம் எடுப்பதால் குடிக்க தண்ணீர் வேண்டுமென்று  மூதாட்டியிடம் கேட்டுள்ளார்.

அந்த மூதாட்டி தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற நிலையில் அவரும் பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றார். இதைத்தொடர்ந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.