கடலூர் மாவட்டம் எஸ் புதூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு அஜித்குமார், அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜித் குமாருடன் கோகுல் என்பவர் ஒன்றாக படித்தவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோகுல் அஜித்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எனது அப்பா பாஸ்கரன் மூலம் தமிழக அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார். அதற்கு என் மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து பாஸ்கர் என்னை தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கி தருகிறோம் என ஆசை வார்த்தைகள் கூறி 6 லட்ச ரூபாய் பணத்தை வாங்கினார். அவர்கள் கூறியதை நம்பி நானும் நம்பிக்கையாக இருந்தேன். அதன் பிறகு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தினார். இது குறித்து கேட்டபோது 1.5 லட்சம் பணத்தை திரும்பி கொடுத்தார்.

மீதமுள்ள பணத்தை தரவில்லை. என்னைப் போலவே குணசேகரன் என்பவரிடமும் 12.5 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து நாங்கள் கேட்டபோது தான் ரயில்வேயில் பெரிய பதவியில் இருப்பதாகவும், எனது மனைவிக்கு கலெக்டர் ஆபீஸில் எல்லாரையும் தெரியும். அதனால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

நீ எங்க வேண்டுமானாலும் புகார் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன் என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவேந்திரன் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஸ்கரன், அவரது மனைவி அனுசுயா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.