தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதினை வென்றார். இவர் நடித்த முத்தழகு கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இவர் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் பிரியாமணி ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தார்.

அதாவது முஸ்தபா ராஜ் முஸ்லிம், பிரியாமணி ஹிந்து. இதன் காரணமாக அவர் மீது விமர்சனங்கள் குவிந்த நிலையில் பிரியாமணி மதம் மாறிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சர்ச்சைகளுக்கு தற்போது சமீபத்தில் மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் திருமணத்திற்கு பிறகு மதம் மாறிவிட்டதாக கூறுகிறார்கள். என்னை கட்டாயப்படுத்தி மதம் மாற்ற வைத்ததாக தகவல் வெளியாகும் நிலையில் அதில் உண்மை இல்லை. நான் தற்போது வரை மதம் மாறவில்லை.

எனக்கு ஜிகாத், முஸ்லிம் மற்றும் உங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்றெல்லாம் குறுந்தகவல்கள் வந்தது. நான் ஒருவரை காதலித்து மத வேறுபாடு பாராமல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இதை சுற்றி ஏன் இவ்வளவு விமர்சனங்கள் வருகிறது என்பது எனக்கு தெரியவில்லை. மேலும் நான் இந்துவாகப் பிறந்தேன். இப்போதும் என் மதத்தை தான் பின்பற்றுகிறேன். நான் திருமணத்திற்கு முன்பே என் கணவரிடம் மதம் மாற மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டதாக கூறினார்.