
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாளந்தாவில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த புதன்கிழமை வாடிக்கையாளர்கள் நகைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். நகைக் கடைக்காரர்களும் நகைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருந்த வேளையில் கடையின் இடது புறம் ஓரமாக அமர்ந்திருந்த பெண் ஒருவர் தன் முன் வைக்கப்பட்டிருந்த சிவப்பு தட்டில் உள்ள மூக்குத்திகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டு விழுங்கியுள்ளார். கடைக்காரர் நகைகளை மீண்டும் எண்ணிய போது அதில் சில நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் அந்தப் பெண்ணிடம் விசாரிக்க தொடங்கியுள்ளார். ஆனால் அந்தப் பெண் அதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஊழியர்கள் சரி பார்த்தபோது அந்தப் பெண் நகைகளை விழுங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்தப் பெண்ணை பிடித்து வாயை சோதித்துப் பார்த்தபோது வாயினுள் சிறு சிறு தங்க நகைகளை விழுங்கி இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்தப் பெண்ணை நகைக்கடைக்காரர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்தவித எழுத்துப்பூர்வமான புகார் ஆதாரங்களும் எழுதிக் கொடுக்காததால் காவல்துறையினர் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.