உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூரில் உள்ள துலாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரேந்திர நாத் துபே என்ற முதியவர், தன் மனைவியுடன் வாழ்ந்து வருகின்றார். இவரது வீட்டில் ஒரே ஒரு கிலோவாட் மின் இணைப்பு இருந்தும், ஜூன் மாத மின் கட்டணம் ரூ.99,457 என வந்துள்ளது.

இதற்கு முன் மே மாதத்திலேயே ரூ.7,430 கட்டணம் வந்த நிலையில், முதியவர் மீட்டர் ரீடரிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், பிரச்சனை தீர்க்கப்படாததோடு, ஜூன் மாத பில்லில் நுகர்வோரின் பெயர் மற்றும் இணைப்பு எண்ணும் வேறுபட்ட ஒருவருடையதாக வந்திருக்கிறது.

துரேந்திர துபே கூறுகையில், மே மாதம் வரை பில் சரியாகவும், தன் பெயரிலேயே வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு மீட்டர் மாற்றப்பட்டதாகவும், அதற்குப் பிறகு பில் தவறாக வர தொடங்கியதாகவும் கூறினார். “நான் ஒழுங்காக கட்டணம் செலுத்திக்கொண்டிருந்தேன்.

ஆனால் இப்போது என் மீட்டரிலிருந்து வாசிக்கப்பட்ட பில், வேறொருவரின் பெயரிலும் எண்ணிலும் வந்திருக்கிறது,” என வேதனையுடன் கூறினார். இந்த குறைபாட்டை சோச்சக்பூர் மின்சார துணை மையத்தில் தெரிவித்த போது, நந்த்கஞ்ச் மையத்திற்குச் சென்று அதிகாரியை சந்திக்க வேண்டும் என கூறப்பட்டது.

“நான் வயதானவனாக இருக்கிறேன். சோச்சக்பூர் செல்வதும் சிரமம், இப்போது நந்த்கஞ்ச் செல்வதற்கு என்னால் இயலவில்லை” என  துரேந்திர துபே வேதனையுடன் கூறியுள்ளார். மின்துறையின் அலட்சியத்தால் தம்பதியினர் குழப்பத்துடன் தவிக்கின்றனர்.

மேலும், இந்தப் பிரச்சனையை தெளிவுபடுத்த சைத்பூர் மற்றும் காஜிப்பூர் மின்துறை அதிகாரிகளின் எண்ணுக்கு பல முறை அழைத்தாலும், எந்த அதிகாரியும் அழைப்பை எடுப்பதற்குத் தயார் இல்லை என்பது மேலும் கவலையைக் கூட்டுகிறது.