பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்து விட்டேன். எங்கள் கட்சியைப் பற்றி நீங்கள் பலமுறை கேள்வி கேட்டு நிலையில் நானும் பதில் அளித்துள்ளேன். தர்மபுரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அப்போது அவர் நான் என்ன குற்றம் செய்தேன். என்னை ஏன் பதவி நீக்கம் செய்தீர்கள் என்று கேட்டார். இது முழுக்க முழுக்க கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் திசை திருப்பும் முயற்சி. அவர் தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும் கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சிக்கிறார். அதற்கு உரிய விளக்கம் அளிப்பது என்னுடைய கடமை.

இனிப்பை தவிர்த்து கசப்பான மருந்துகளை கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. அவர் என்னை குற்றவாளியாக்கி கட்சிக்காரர்களிடமும் மக்களிடமும் அனுதாபம் தேடி கொள்கிறார். கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடோடு நடத்திய கட்சியில் தற்போது அவர் கலகத்தை உண்டாக்குகிறார்.

வளர்த்த கடா மார்பில் எட்டி உதைப்பது போல் கட்சி வளர்ச்சிகளுக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்கிறார். அழகான ஆளுயற வளர்ந்த கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார். புதுச்சேரியில் நடந்த பொது நிகழ்ச்சியில் மேடை நாகரிகம் இல்லாமல் செயல்பட்டது யார். ஏதோ போகிற போக்கில் நான் இதை சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் நான் சொல்கிறேன் என்று கூறினார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்ட போது நான் செத்துப் போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை தடுத்துவிட்டார். அன்புமணி கூசாமல் பொய் சொல்வார். உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அவர் கூறியது பொய். தகப்பனிடம் தோற்பது ஒன்றும் அவமானகரமானது அல்ல என கூறியுள்ளார்.

மேலும் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என கூறிக்கொண்டு அன்புமணியும்,  சௌமியாவும் எனது காலை பிடித்து அழுதார்கள். தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினார்கள். அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை அன்புமணி கேட்கவில்லை. பாமக செயல் தலைவராக செயல்படுவேன் என்ற அன்புமணி பகிரங்கமாக அறிவிப்பதே பிரச்சனைக்கு தீர்வாகும் என ராமதாஸ் கூறியுள்ளார்.