பெங்களூருவில் நடந்த ரோட்டரேஜ் சம்பவம், இந்திய விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் ஷிலாதித்யா போஸ் மற்றும் ஒரு கால்சென்டர் ஊழியர் விகாஸ் இடையே மோதலாக மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, அதிகாரி மீது #ArrestShiladityaBose மற்றும் #ArrestWingCommander போன்ற ஹாஷ்டாக்கள் ட்ரெண்டாகியுள்ளன. அதாவது அந்த அதிகாரி தனக்கு கன்னடம் தெரியாததால் தான் இப்படி தாக்கியதாகவும் ஒரு நாட்டை பாதுகாப்பவரை இப்படியா செய்வீங்க என்றும் ஆதங்கத்தோடு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் விகாஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

அதே நேரத்தில் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியானதால், அதிகாரியே விகாஸை அடித்தது உண்மை என தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தைக் குறிப்பிடும் @DadigaGanga என்ற பயனர், “நாட்டைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரி, ஒரு பொது மகனை அடித்துவிட்டு ஓடுகிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இன்னொரு பயனர் கூறியதாவது, “இது மொழிப் பிரச்சனை அல்ல – இது நீதியைப் பற்றியது. சுவிகி டெலிவரி பையனை அடித்தது கோரமான செயல்” என பதிவிட்டுள்ளார்.

 

விகாஸின் தாயார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில், “நாங்கள் சும்மாவே இந்த விவகாரம் பெரிதாகாமல் விட்டுவிட்டோம். ஆனால் இப்போது என் மகனை தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்கள்” என கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் இருந்து வருகின்ற மக்கள் ஆதரவும், கண்டனங்களும் தற்போது அதிகாரிகளுக்கு அழுத்தமாக மாறியுள்ளது. இந்நிலையில், அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகள் நாடளவில் பரவிவருகின்றன.