மும்பை நகரம் முலுந்த் மேற்கு பகுதியில் உள்ள ‘தியோப்ரோமா’ பேக்கரியில், பன்னீர் ரோல்ஸ் மேல் கரப்பான் நடமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு வாடிக்கையாளர் ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “நாங்கள் அந்த கடையில் பன்னீர் ரோல்ஸ் வாங்கப் போனோம். வாங்கும் முன் தட்டில் ஒரு கரப்பான் நடமாடுவது கண்ணில் பட்டது. உடனடியாக ஊழியர்களிடம் சொன்னோம். அவர்கள் அந்த டிரேயை எடுத்து வைத்தனர். ஆனால் பிறகு என்ன நடந்தது தெரியவில்லை” என கூறியுள்ளார்.

This is what we saw in Theobroma: Runwal Greens, Mulund West, Mumbai
byu/Familiar-Guava-3123 inindiasocial

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து பலரும் உணவகங்களில் தங்களுக்குத் தரப்பட்டுள்ள மோசமான அனுபவங்களை பகிரத் தொடங்கினர். குறிப்பாக, உணவகங்களில் சுத்தம், ஹைஜீன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

ஒரு பிரபல பேக்கரியில் இப்படி சீர்கேடான காட்சிகள் இடம்பெறுவது வருத்தமளிக்கிறது என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் உடனடியாக விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உணவகங்களில் சுத்தம் மற்றும் சுகாதார பராமரிப்பு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சிதைக்கும் இத்தகைய செயல்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.