
பாலிவுட் மற்றும் தெலுங்கில் அதிக படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. இவர் சத்யா, சிவா, ரங்லீலா, கம்பெனி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போதைய இயக்குனர் ராஜமவுலியை பாராட்டி நகைச்சுவையாக வெளியிட்டுள்ள ஒரு பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குனர் ராஜமவுலி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கி உலகம் முழுவதும் பிரபலமானவர். அதன் பிறகு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து பாடலுக்கு சமீபத்தில் கோல்டன் க்ளோப் விருது கிடைத்த நிலையில், தற்போது ஆஸ்கார் இறுதிப்பட்டியலிலும் தேர்வாகியுள்ளது.

இந்நிலையில் ராம்கோபால் வர்மா இயக்குனர் ராஜமவுலி மற்றும் ஜேம்ஸ் கேமரூன் சந்திப்பு தொடர்பான வீடியோவை பகிர்ந்து அவரை பாராட்டியுள்ளார். அதன் பிறகு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் உட்பட பொறாமை கொண்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் உங்களை கொலை செய்ய ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர். எனவே நீங்கள் உங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் நானும் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனர் ராஜமவுலியை பாராட்டுவதாக நினைத்து நகைச்சுவையாக வெளியிட்டுள்ள ராம் கோபால் வர்மாவின் பதிவு இயக்குனர் ராஜமவுலியின் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
And sir @ssrajamouli , please increase ur security because there is a bunch of film makers in india who out of pure jealousy formed an assassination squad to kill you , of which I am also a part ..Am just spilling out the secret because I am 4 drinks down
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023