சமூக வலைதளங்களில் தற்போதைய ட்ரெண்டாக இருக்கும் ‘சார்கோல் பீல்-ஆப் மாஸ்க்’ (Charcoal Peel-off Mask) பயன்படுத்திய இளம்பெண் ஒருவருக்கு, அவரது புருவ முடிகள் வேரோடு பிடுங்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள பக்கங்களில் சமீபநாட்களாக ஒரு வீடியோ பரவலாகக் காணப்படுகிறது. அதில், இளம்பெண் ஒருவர் தனது முகத்தைச் சுத்தமாகவும், பொலிவாகவும் மாற்றுவதற்காகச் சந்தையில் விற்கப்படும் ‘சார்கோல் பீல்-ஆப் மாஸ்க்’ எனப்படும் முகமூடிப் பசையை வாங்குதிக் கொண்டு வந்து முகத்தில் பூசியுள்ளார்.

ஆனால், அதனை முகத்தில் இருந்து பிரித்தெடுக்கும் போது, அந்த மாஸ்க்கில் உள்ள அதிகப்படியான பசையின் காரணமாக, அவரது புருவ முடிகள் (Eyebrows) மற்றும் முகத்தில் இருந்த முடிகள் அனைத்தும் வேரோடு  உதிர்ந்துள்ளன. வலியால் அந்தப் பெண் துடிக்கும் காட்சிகள் நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by nisha singh (@nisha_20117)

இதுகுறித்து அழகுக்கலை நிபுணர்கள் கூறுவதாவது, இத்தகைய ‘பீல்-ஆப் மாஸ்க்’களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் பசைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை முகத்தில் உள்ள மென்மையான முடிகளை வேரோடு உதிர்த்துவிடும் தன்மை கொண்டவை. குறிப்பாக, உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்களுக்கு இதனால் கடுமையான எரிச்சல், ஒவ்வாமை, சருமம் சிவந்து போதல் மற்றும் வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதேபோல் பல வீடியோக்கள் ஏற்கனவே வைரலாகியுள்ளன. பலர் தங்களின் புருவங்கள், மீசை முடிகள் அல்லது முகத்து முடிகளை இத்தகைய மாஸ்க்குகளால் இழந்துள்ளனர். எனவே, முகத்தில் மாஸ்க் பூசும் போது கண்கள், புருவங்கள் மற்றும் உதடுகளுக்கு அருகில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதையும் முகத்தில் முழுமையாகப் பூசுவதற்கு முன்பு, உடலின் வேறு பகுதியில் ‘பேட்ச் டெஸ்ட்’ (Patch Test) செய்து ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்” என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.