திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், காணாமல் போனதாக தேடப்பட்ட ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகியோர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் அருகே, இதுபோன்ற கொடூர கொலை நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், 11ஆம் தேதி இருவரும் நண்பர்களுடன் வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவர்களது செல்போனும் அணுக முடியாத நிலை ஏற்பட்டதும், சந்தேகமடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆகாஷ் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவராக இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், நல்லப்பாண்டி என்ற இளைஞர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆகாஷ் மற்றும் ஜானகிராமனை தாம் கொலை செய்து புதைத்ததாக ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவருடன் தொடர்புடைய காமேஷ் மற்றும் மணியையும் போலீசார் கைது செய்தனர்.  போதையில் இருந்த ஐந்து நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கஞ்சா புழக்கத்தில் உருவான கெத்து போட்டியில் மாறியதாகவும், அதற்காகவே ஆகாஷை வெட்டி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

ஜானகிராமன் அந்த சம்பவத்தை நேரில் பார்த்ததால், அவரையும் கொலை செய்து அதே இடத்தில் இருவரையும் புதைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காட்டிய இடத்தை தோண்டியதில் இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டன.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சீனுவை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சந்தேக நபர்களைக் கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பெருமாள் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கொடூர சம்பவம்,சட்டவிரோத கஞ்சா புழக்கம் மற்றும் அதன் தீமைகளை சமுதாயம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.