பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் பயிற்சி வகுப்பில் மாணவனை ஒரு ஆசிரியர் கொடூரமாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனேஷ்வர் காட்டில் உள்ள “Big Data Physics Classes” என்ற பயிற்சி மையத்தில் இந்த சம்பவம் நடந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகும் 35 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு ஆசிரியர் மாணவனை குச்சியால் அடிப்பதோடு, தலைமுடியைப் பிடித்து இழுத்தும், மோசமான வார்த்தைகளில் திட்டியும் அவமானப்படுத்தியது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. மாணவர் சன்னி குமார் என்பவரை ஆசிரியர் கழுத்தை நெரித்தும், குச்சியால் அடித்தும் தாக்கியதை அந்த வகுப்பில் யாரோ ஒருவர் மொபைல் போனில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த மக்கள், “ஒரு தந்தை கூட தன் மகனை இப்படி அடிக்கமாட்டார்?” என கூறியதோடு , ஆசிரியரின் நடத்தை மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இந்த மாணவர் இருந்த இடத்தில் அவருடைய மகன் இருந்திருந்தால் இப்படி செய்வாரா?” எனக் கேட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து வகுப்புத் துறை இயக்குநர் நிர்மல் குமார் கூறியதாவது: “இரண்டு மாணவர்கள் இடையே இருக்கை விஷயமாக சிறிய தகராறு ஏற்பட்டது. அதற்காக குற்றம் செய்த மாணவருக்கு லேசான அடிதான் கொடுக்கப்பட்டது. இருவருடைய பெற்றோர்களும் அழைக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே வந்தார். மற்றவர்கள்  வரவில்லை” எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது மாணவர் சன்னி குமார் பீகார் ஷெரீப் மாடல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கும்போது, “வகுப்பில் அமர்ந்திருந்த சன்னியை மற்றொரு மாணவர் தாக்கியதை தொடர்ந்து, ஆசிரியர் நேரடியாக சன்னியை மட்டுமே அடிக்கத் தொடங்கினார். இது தவறு” என கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.