ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு ஈவெரா திருமகன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி சம்பத் தந்தையார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எனப் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஈ.வெ.ரா திருமகன் அவர்கள் 2021 ஆம் ஆண்டு தான் முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்து கொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராக திகழ்ந்து வந்தவர் ஈவெரா திருமகன் அவர்கள் ஒரு மாதத்துக்கு முன்பு கூட குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக் கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்று சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது தனது அன்பு மகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவன் அவர்களை எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன்.

ஈ.வெ.ரா திருமகன் அவர்களின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நகர் ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.