
சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் 42 வயது பெண், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் ‘கோபி’ என்ற நபருடன் பழக ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர், பின்னர் இரவு நேரங்களில் யாரிடமும் பேசக்கூடாது, தன்னிடம் மட்டும்தான் தொடர்பில் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பி, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்புவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அந்தப் பெண் கோபியின் நம்பரையும், இன்ஸ்டாகிராம் கணக்கையும் பிளாக் செய்து புதிய எண்ணை வாங்கியுள்ளார். ஆனால், கோபி தனது அக்காவின் எண்ணை பயன்படுத்தி தொடர்பு கொண்டு, மீண்டும் தொந்தரவு செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு படை, கோபியின் கைபேசி சிக்னலைத் தடங்களால் கண்காணித்து, தூத்துக்குடியில் இருப்பதை கண்டறிந்தனர். போலீசார் அங்கு சென்று கோபியை கைது செய்தனர். இவர் தற்போது தேங்காய் குடோனில் வேலை செய்து வருகிறார் என்றும், பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், கோபி வெவ்வேறு பெயர்களில் 5 பேஸ்புக் பக்கங்கள் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் கணக்குகள் வைத்துள்ளார். இவையனைத்தையும் பயன்படுத்தி ஏராளமான பெண்களுக்கு தொல்லை கொடுத்தது உறுதியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட கோபி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.