குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பாதல் என்ற 14 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் தன்னுடைய நண்பர்களுடன் அமர்ந்திருந்தார். அந்த வழியாக வேராவல்-பாந்த்ரா ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் தண்ணீர் குடித்துவிட்டு பாட்டிலை வெளியே தூக்கி வீசிய நிலையில் அது பாதலின் மார்பின் மீது பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சிறுவன் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில் உடனடியாக நண்பர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். சிறுவனின் மரணத்திற்கு காரணம் முதலில் மாரடைப்பு என்று போலீசார் சந்தேகப்பட்ட நிலையில் பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது தான் உண்மை தெரிய வந்தது. ஒரு பொருள் மிகவும் அதிவேகமாக வந்து இதயத்தின் மீது பட்டால் அது இதயத்தை தாக்கி உயிரிழப்பு ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது. மேலும் அலட்சியமாக செயல்பட்ட ரயில் பயணி மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.