பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், அணியின் உரிமையாளர் சமீன் ராணா, தனது அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் ஐபோன் பரிசளிக்கப்படும் என டிரஸ்ஸிங் ரூமில் அறிவித்தார். கேப்டன் ஷாஹீன் அப்ரிடி இதை உறுதி செய்ததும், வீரர்கள் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியில் கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள், “ஐபோனுக்காக இவ்வளவு உற்சாகமா?” என கேலி செய்துள்ளனர். ஏற்கனவே, ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு மட்டும் ஐபோன் பரிசளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வெற்றிக்குப் பிறகு முழு அணியுக்கும் பரிசளிக்கப்பட்டது. மேலும், கேப்டன் ஷாஹீன் அப்ரிடிக்கு 24 காரட் தங்கம் பூசப்பட்ட ஐபோன் 16 ப்ரோ பரிசாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதே சமயம், இந்த ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா தொழிற்சாலைகளில் iPhone 16 ப்ரோ உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுக்கு நேரடியாக வர்த்தகம் இல்லாவிட்டாலும், அரபு நாடுகள் மூலமாக இந்தியா தயாரிக்கும் பொருட்கள் அங்கு விநியோகிக்கப்படுவது சாதாரணம். இதனை அறிந்த நெட்டிசன்கள், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோனுக்காக பாகிஸ்தான் வீரர்கள் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறார்கள்!” என சமூக ஊடகங்களில் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.