மத்திய பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் மருத்துவமனையிலேயே ஒரு நோயாளர் டிரிப் போட்டபடியே மதுபானம் அருந்திய அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாவட்ட அரசு மருத்துவமனையின் சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவேந்திர யாதவ் என்ற நோயாளர், தனது உறவினர்களுடன் படுக்கையில் அமர்ந்து கண்ணாடி கையில் வைத்து மதுபானம் அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது டியூட்டியில் இருந்த நர்சிங் ஆபீசர் காயத்ரி சௌதரி சம்பவத்தை நேரில் பார்த்து உடனே தடுத்தார். அதற்கிடையில் நோயாளியின் உறவினர்கள் கண்ணாடியை மறைக்க முயன்றாலும், நர்ஸ் அதை தடுத்து கண்டித்ததுடன், சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. வீடியோவில் நர்ஸ் கடும் கோபத்துடன் நோயாளி மற்றும் அவருடைய உறவினர்களிடம், “இது மருத்துவமனை, சிகிச்சை பெறும் இடம்… வீட்டில் குடிப்பது வேறு விஷயம், ஆனால் இங்கே இப்படிச் செய்வது மருத்துவத்தையும் மனிதத்தையும் அவமதிப்பதாகும்” என்று கண்டித்துக் கொண்டிருப்பது கேட்கிறது. மருத்துவமனையை “நோயாளிகள் குணமடையும் கோவில்” என அவர் கூறிய விதம் பலரையும் பாதித்துள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல்.