
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு பெண் கொலை வழக்கு தற்போது அதிர்ச்சி தகவலுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோதிசாத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 54 வயதான குட்டி பாய் என்பவர், தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் மே 19ஆம் தேதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
தனியாக வசித்து வந்த அவரின் மரணத்திற்கு காரணம் என்னவென்பது முதலில் தெரியவில்லை. ஆனால், போலீசார் அமைத்த விசாரணைக் குழு 150க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து, சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவனை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில், நீண்ட நாட்களாக ஆபாச இணையதளங்களைப் பார்ப்பது தான் தனக்கு பழக்கமாகிவிட்டதாகவும், அதே நாளிலும் ஆபாசக் காணொளிகளை பார்த்தபின், கத்தியுடன் பெண் வீட்டிற்குள் நுழைந்து அவரை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளான்.
பெண் விழித்ததும், அவரை அடையாளம் கண்டுகொண்டதால் பயந்த சிறுவன், பல முறை கத்தியால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளான். இது ஒரு திட்டமிட்ட கொலை அல்ல, ஒரு மனஉளைச்சலால் செய்த தவறு என போலீசார் கூறுகின்றனர். ஏன் சிறுவன் பெண்ணை கொலை செய்தான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையை அடுத்து, சிறுவன் ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்துள்ளான். பெண்ணின் மொபைலை நொறுக்கி வீசிவிட்டு, சிம்மை உடைத்துள்ளார். ரத்தக் கறைகள் இருந்த துணிகளை மறைத்து வைத்திருந்தது போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்தது.
தற்போது அந்த சிறுவனை சிறுவர் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.