
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையத்தைச் சேர்ந்த 19 வயதான அஸ்விகா, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc., IT இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அஸ்விகா மற்றும் பொள்ளாச்சி அருகே அண்ணாமலையார் நகரைச் சேர்ந்த பிரவீன்குமார் (23) காதலித்து வந்தனர்.
தொலைபேசி வழியாக உறவை வளர்த்து வந்த இருவரும், குடும்பங்களின் ஒப்புதலோடும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அஸ்விகா சமீபமாக பிரவீனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததுடன், இன்ஸ்டாகிராமில் மற்றொரு ஆண் நண்பருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார்.
இதனால் சந்தேகத்திலும், கோபத்திலும் உள்ள பிரவீன்குமார், நேற்றைய தினம் அஸ்விகாவை நேரில் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அஸ்விகாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையாகியதுடன், ஆத்திரம் அடைந்த பிரவீன், உடன் எடுத்துச் சென்றிருந்த கத்தியால் அஸ்விகாவை முகம், கழுத்து உள்ளிட்ட 5 இடங்களில் குத்தி படுகாயம் ஏற்படுத்தினார்.
அஸ்விகாவின் அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக அஸ்விகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும், துரதிஷ்டவசமாக டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனர். இதன்பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
கொலை செய்து விட்டு தலைமறைவான பிரவீன்குமார், பின்னர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த கொடூர சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.