அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான நீல் எல்ஷெரிப், அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த புகாரில், 2024 மே மாதம் நியூயார்க் ஜே.எப்.கே. விமான நிலையத்தில் இருந்து இத்தாலியின் மிலானோக்கு புறப்பட்ட 8 மணி நேர விமான பயணத்தின் போது, ப்ரீமியம் எகனாமி இடத்தில் தனது அருகில் அமர்ந்திருந்த ஒரு மதுபானம் அருந்திய ஆண்பயணி தனது உடை மீது கைகளால் தடவி ஒரு மணி நேரத்துக்கு மேல் சுயஇன்பம் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விமான ஊழியரிடம் புகார் கூறியபோது, “ஆண்கள் அப்படி தான் செய்கிறார்கள்” என விமான பணியாளர் பதிலளித்ததாகவும், இது தன்னை மிகவும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். விமானத்தில் ஒரு பெண் பயணியாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, விமான நிறுவனம் எந்தவித உதவியும் செய்யாமல் விட்டதோடு, தனது புகாரை சிறுமைப்படுத்தியதையும், மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டதையும் நீல் எல்ஷெரிப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் இனவெறி மற்றும் பாகுபாடு இருப்பதாகவும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீல் எல்ஷெரிப் அரபிய மற்றும் மத்திய கிழக்கை சேர்ந்தவர் எனவும், விமான பணியாளரும், தவறான நடத்தை செய்த பயணியும் வெள்ளைவர்களாக இருந்தனர் என்பதையும் அவர் சுட்டி காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், குற்றச்சாட்டுகளை விமான நிறுவனம் முறையாக சோதிக்கவில்லை என்பதோடு, எதிர்மறையான அனுபவத்திற்கான ஈடு தொகையை வழங்க American Airlines-ஐ வலியுறுத்தியுள்ளார். தற்போது அமெரிக்கன் எயர்லைன்ஸ் நிறுவனம், இந்த புகாரை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.