உத்தரபிரதேச மாநிலம் லோனி, காசியாபாத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பவன் குப்தா என்ற இளைஞர், மே 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை இரவு) தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்யும் முன், 6 நிமிடம் 51 விநாடிகள் கொண்ட உணர்ச்சி மிகுந்த வீடியோ ஒன்றையும், மூன்று பக்கங்களை கொண்ட தற்கொலை கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். இந்த சம்பவம் தற்போது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பவன் குப்தா, ஒரு ஃபவுன்ட்ரியில் பணியாற்றியதுடன், பான்தலா பகுதியில் வசித்து வந்தவர். அவர் தற்கொலை செய்த இடம், அவரது மாமாவின் கட்டி முடிக்கப்படாத வீடாகும். இது பற்றி போலீசார் கூறியதாவது பவன் முன்பு டெல்லியில் ஒரு மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு நர்சுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அதற்குப் பிறகு, அந்த நர்ஸ் சர்பராஸ் மற்றும் சாஹில் என்ற இரு நபர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்ததாகவும், அவர்கள் பவனை பிளாக்மெயில் செய்யத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

பவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில், “நான் பவன் குமார்… என்னை பிளாக்மெயில் செய்கிறார்கள். அவர்களின் பெயர்கள் சர்பராஸ் மற்றும் சாஹில். இந்த உலகத்தில் நீதி இருந்தால், சர்பராஸ் கடுமையான தண்டனை பெற வேண்டும். உங்கள் மகன் என் நிலைமையில் இருந்தால், நீதி கிடைக்கும் அல்லவா என்றுஎழுதியுள்ளார். மேலும், “மகள்களை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள், இப்போது மகன்களையும் காப்பாற்றுங்கள்… ஒரு ஆணின் அழுகையை யாரும் கேட்பதில்லை” என உணர்ச்சி மிக்க வரிகளையும் அவர் எழுதியுள்ளார்.

பவன் தனது கடிதத்தில், “நான் 112-க்கு அழைத்தேன், ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை” எனக் குறிப்பிடுகிறார். இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுபற்றி லோனி ஏசிபி சித்தார்த் கவுதம் தெரிவித்ததாவது: “பவனின் தந்தை ராகேஷ் குமார் தகவல் வழங்கியதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பவன் எழுதிய கடிதம் மற்றும் வீடியோ முக்கிய ஆதாரங்களாக எடுக்கப்பட்டுள்ளன. சர்பராஸ் கைது செய்யப்பட்டுள்ளார், சாஹிலை தேடும் பணி தொடர்கிறது” என கூறினார்.

 

மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, ஆண்களின் மன உளைச்சலையும், அவர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தத்தையும் பற்றி புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு ஆண் அழுகிறான் என்றால், அதை யாரும் கவனிக்க மாட்டார்களா?” என்ற பவனின் கேள்வி சமூகத்தில் பலரது மனதை குலைத்துவிட்டது.