உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஹூராபாத் கிராமத்தைச் சேர்ந்த சூஃபி தத்துவஞானி சையத் முகமது கௌஸ், 15ஆம் நூற்றாண்டில் யோகா பற்றிய பாரசீக மொழி நூலை எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் ‘பஹ்ருல் ஹயாத்’. இதில் 22 யோகாசனங்கள், அவற்றின் செய்யும் முறை, நன்மைகள், மேலும் படங்களுடன் கூடிய விளக்கங்கள் அடங்கியுள்ளது. சுமார் 525 ஆண்டுகளுக்கு முன்னரே, யோகாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு முஸ்லிம் அறிஞர் இதைப் பதிவு செய்திருப்பது இந்திய யோகா வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த அரிய நூல் தற்போது பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, யோகாவை எப்போது றசெய்வது, எப்படி செய்வது, எதற்கு செய்ய வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டி அளிக்கப்பட்டுள்ளது. யோகாசனங்களை உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும் பயிற்சி என விளக்கப்பட்டிருக்கும் இந்த நூல், யோகா என்பது ஒரே மதத்திற்கு சொந்தமானது அல்ல, இந்திய பாரம்பரியத்தின் அடையாளம் என வலியுறுத்துகிறது. சமூகத்தின் அனைத்து பிரிவினரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

சையத் கௌஸ், யோகா நூல்களை எழுதியதுடன், கவிஞர், தத்துவஞானி மற்றும் யோகா குருவாகவும் புகழ்பெற்றவர். இவருடைய மற்ற முக்கிய நூல்கள் ஜவஹர்-இ-கம்சா மற்றும் நஸ்பனாமா அசாதத் காசிபூர் ஆகியவை. இந்நூல்கள், அவரது கல்வி, கலை, கலாசாரம் மற்றும் யோகாவை ஒருங்கிணைத்த முயற்சிகளை வெளிப்படுத்துகின்றன. ஜஹூராபாத்தில் உள்ள ‘கௌசி தலாப்’ என்ற குளம் மற்றும் அவரது புனித எச்சங்கள் இன்று வரை அந்தப் பகுதியின் மரபாகக் கருதப்படுகின்றன. 11வது யோகா தினத்தை முன்னிட்டு, இப்படியான பண்டைய பங்களிப்புகளை புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.