உத்திரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் 25 வயது வழக்கறிஞர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரோஜினி நகர் தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம், அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.

பந்த்ரா பகுதியில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு அருகில் வசித்து வந்த அபிஷேக் கேவல் என்ற பவன் சிங், திங்கட்கிழமை வழக்கம்போல தனது சக வழக்கறிஞர்களுடன் தாலுகா அலுவகத்திற்கு வந்தார். அலுவலகம் முடிந்து, சக வழக்கறிஞர்களுடன் வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரது கால்கள் தடுமாறி மயங்கி விழுந்தார்.

சுற்றியிருந்தவர்கள் எதையும் புரிந்துகொள்ளும் முன்பே, அவர் அசைவின்றி கிடந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

 

 

அபிஷேக் சிங்கிற்கு எந்தவிதமான உடல்நலக்குறைவும் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். “இது வரை அவருக்கு எந்த உடல்நலக் கோளாரும் இல்லை. திடீரென நடந்த இந்த மரணம் எங்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என கூறியுள்ளனர்.

இந்த சம்பவம், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழும் திடீர் மாரடைப்பு சம்பவங்களை மீண்டும் நினைவுறுத்துகிறது. எழுந்தபோது, நடக்கும்போது, சிரிக்கும்போது கூட திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் அதிகரித்து வருகின்றன. இதனால் இளம் வயதில் கூட இதயம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அவசியம் என மருத்துவ வட்டாரங்கள் வலியுறுத்துகின்றனர்.