கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் மர்ம நபர் ஒருவர் மூன்று வீடுகளுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல நித்திரவிளை பகுதியிலும் பூட்டி கிடந்த வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. மர்ம நபர் அம்மாவாசை இருட்டு நேரத்தில் திருட்டு செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

சுந்தர்ராஜ் அம்மி கொத்தும் தொழில் செய்து வந்தார். அவரது குடும்பம் வறுமையில் வாடியது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளார். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அம்மாவாசை இரவு நேரத்தில் மட்டுமே திருடி வந்துள்ளார். ஒரு வீட்டில் திருடிய பிறகு எல்லையை விட்டு வெளியே போகாமல் அதே பகுதியிலேயே புதர்களுக்கு இடையே பதுங்கி தூங்கிவிட்டு காலையில் கட்டைப்பையுடன் கூலி தொழிலாளி போல அங்கிருந்து சென்று விடுவார்.

அதன் பிறகு கேரளா வழியாக தப்பி கோயம்புத்தூரில் இருக்கும் மகன் வீட்டில் பதுங்கி திருடிய நகைகளை விற்று பணமாக்குவார். பின்னர் சொந்த ஊரான மதுரைக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது புதிதாக பங்களா வீடு கட்டி வருவதாகவும், லாரி, கார், குட்டியானை ஆட்டோ வாங்கி ட்ரான்ஸ்போர்ட் தொழிலும், கைலான் கடை தொழிலும் செய்து வருவதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் 40 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.