
எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாததற்கு அந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த விவசாயிகளிடம் போய் தான் செங்கோட்டையன் கேட்க வேண்டும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வலம் வந்தது அதிமுக. இப்போது துண்டு துண்டாக சிதறி பார்க்கவே பரிதாபமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணி, மறுபக்கம் சசிகலா அணி, தினகரன் அணி வேறு பக்கம் என அதிமுகவில் பல அணிகள் பிரிந்து கிடக்கிறது. இந்த ஒட்டுமொத்த அணிகளுமே தற்போது அதிமுகவை கையில் வைத்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நிற்கிறார்கள். இது எதற்கும் செவி சாய்க்காமல் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை வழிநடத்திவரும் நிலையில் இப்போது அவரது அணிக்கு உள்ளேயே புகைச்சல் உருவாகியுள்ளது. இது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .
முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளது தான் தற்போது ஹாட் டாபிக். அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் தான் அந்த நிகழ்ச்சி புறக்கணித்தேன் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாததற்கு அந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த விவசாயிகளிடம் போய் தான் செங்கோட்டையன் கேட்க வேண்டும். செங்கோட்டையன் அதிமுகவையோ, எடப்பாடி பழனிசாமியையோ குறை சொல்லவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா போல எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வலுவாக கொண்டு செல்கிறார். அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் . பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அதிமுகவையும், எடப்பாடியையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக எங்களுக்குள் ஏதாவது செய்து பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்