
பிரேசிலில் தற்போது “மறுபிறவி பொம்மைகள்” (Reborn Dolls) என அழைக்கப்படும் மனிதக் குழந்தையைப் போலவே தோற்றமளிக்கும் பொம்மைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோவொன்றில், ஒரு பிரேசிலிய பெண், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் இந்த வகை பொம்மையுடன் வருகிறார். இது உண்மையான குழந்தையா அல்லது பொம்மையா? என குழப்பத்தை ஏற்படுத்தியதால், மருத்துவ பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வகை பொம்மைகள் அழுவது போன்ற சத்தம் எழுப்பும், பசிபையர் (pacifier) போன்ற கருவிகளால் அமைதிப்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால், அவை உண்மையான குழந்தைகளைப்போல் தோன்றும் என்பதும், சமூக ஒழுங்குக்கும் மருத்துவ அவசர சேவைக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது
இந்த விவகாரம் தற்போது பிரேசில் அமேசான் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜாவோ லிஸ் கவனத்திற்கு சென்றுள்ளது. அவர், “இந்த வகை பொம்மைகள் சுகாதார பாதுகாப்பு முறைக்கு ஒரு சவாலாக இருக்கின்றன, அவற்றை தடை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். ஆனால், இதுவரை இந்த பொம்மைகள் மருத்துவமனைகளில் பிரச்சனை ஏற்படுத்தியதற்கான அதிகாரப்பூர்வ புகார் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து இணையத்தில் விவாதம் உருவாகியுள்ளது. சிலர், இந்த பொம்மைகள் பெற்றோருக்கான பயிற்சி கருவிகளாகவும், மன அழுத்தம் குறைக்கும் சிகிச்சையாகவும் பயன்படக்கூடும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். மறுபுறம், சிலர் இவை பயமுறுத்தும் தோற்றத்தையும், பொய்யான சூழ்நிலைகளை உருவாக்கி சமூக ஒழுங்கை பாதிக்கக்கூடியதுமாக கண்டிக்கின்றனர்.
மேலும் இந்த ‘மறுபிறவி பொம்மைகள்’ தொடர்பாக சட்டமன்ற விவாதம் தொடங்கியுள்ளதால், எதிர்காலத்தில் அதற்கு உரிய விதிமுறைகள் அல்லது கட்டுப்பாடுகள் உருவாக்கப்படலாம் என தெரிகிறது.